திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட நெற்கட்டான் செவலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரரான பூலித்தேவன் என்பவரின் படையில் படைவீரராகவும், படைத்தளபதியாகவும் இருந்தவர் விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன். புலித்தேவனின் படையில் தளபதியாக செயல்பட்ட வெண்ணிக் காலாடி, மற்றும் பொட்டி பகடை போன்றோரும் இவருடன் விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களேயாவர்.
ஆங்கிலேய படைகளை தனியாக சென்று அழித்தார். ஒண்டியாக சென்று எதிரிகளை கொன்றதால். ஒண்டிவீரன் என அழைக்கப்பட்டார். அவரது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவுநாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும் சேவல் பச்சேரி கிராம மக்கள் அவரது நினைவிடத்தில் பால் அபிஷேகம் செய்து மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
கொரோனா ஊரடங்கு அமலில் இருந்து வருவதால், வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் சமுதாயத்தலைவர்கள் யாரும் விடுதலைப்போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவுநாள் அனுசரிக்க அனுமதி கிடையாது. இதற்கு சமுதாய அமைப்புகள் அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உட்பட ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு ஏ.டி.எஸ்.பி, பத்து டி.எஸ்.பி.க்கள் 30 இன்ஸ்பெக்டர்கள், 100 எஸ்.ஏ.க்கள் உட்பட 1300 போலீசார் 15 இடங்களில் சோதனைக் சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.