• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தி.மு.க.வினர் வாக்குஇயந்திரத்தை மாற்ற முயற்சி.., சங்கரன்கோவிலை ஸ்தம்பிக்க வைத்த அ.தி.மு.க..!

Byவிஷா

Feb 21, 2022

சங்கரன்கோவில் அருகே நள்ளிரவில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் திமுகவினர் நுழைந்ததாக கூறி, அதிமுக பாஜகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள, புளியங்குடி நகராட்சி வாசுதேவநல்லூர், சிவகிரி, ராயகிரி ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள் அனைத்தும், புளியங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டு, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இரவு 11 மணி அளவில், காரில் திமுகவினர் நான்கு பேர் உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை அதிமுகவினர் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதில் இரண்டு பேர் தப்பி ஓடியதாகத் தெரிகிறது.
இதனால் வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு இயந்திரங்கள் மாற்ற சென்றதாகக் கூறி, அதிமுக, பாஜக, அமமுக ஆகிய கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் சங்கரன்கோவில் செல்லும் சாலையில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.