பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது, இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டிற்கான திருவிழாவில் முக்கிய நிகழ்வான பிப்ரவரி 1ஆம் தேதி 70 அடி கொடிமரம் நடப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் ஆழியார் ஆழியாற்றங்கரை சோமேஸ்வரர் ஆலயம் அருகே மயான பூஜை நடைபெற்றது. இதில் மாசாணி அம்மனின் திரு உருவம் மண்ணால் வடிவமைக்கப்பட்டு அதற்கு பட்டுப்புடவை போர்த்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அருளாளி மனோகரன் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தினார். அப்போது பம்பை காரர்கள் பம்பை அடித்து அம்மனின் வரலாற்றை பாடலாக கூறினர்.
கோவில் அருளாளி அருண் ஆழியாற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை அம்மன் மீது தெளித்து பூஜை நடத்தினார். அப்போது அவர் அருள்வந்து ஆடியபடி மண்ணால் செய்த அம்மன் திருவுருவத்தின்கையிலிருந்த எலும்பை வாயில் கவ்வியபடிபக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனைத் தொடர்ந்து நாளை ஒன்பது மணிக்கு குண்டம் கட்டுதல் நிகழ்வும் மாலை 6 மணிக்கு சித்திரைத் தேர் வடம் பிடித்தல் இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் 17-ஆம் தேதி காலை ஒன்பது முப்பது மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்வும் நடைபெற உள்ளது.