• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

கொடநாடு வழக்கில் குடைச்சல்… சட்டமன்றத்திற்கு வெளியே அதிமுகவினர் தர்ணா…!

By

Aug 18, 2021

திமுக அடுத்தடுத்து பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக அதிமுகவினர் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றதை தொடர்ந்து, பொள்ளாச்சி மற்றும் கொடநாடு வழக்கிலும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை சிக்க வைக்க திமுக அரசு திட்டமிட்டு வருவதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்றைக்கு சட்டமன்றம் தொடங்கியதும் நேரமில்லா நேரத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு கொலை வழக்கை மீண்டும் கையில் எடுத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுகவினரின் பேச்சு உள்ளது என பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவைக்கு இன்று காலையிலேயே கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்த அதிமுகவினர், அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு ஏற்கனவே முடிந்து விட்டதாகவும், பழிவாங்கும் நடவடிக்கையுடன் திமுக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டினார். அதனைத் தொடர்ந்து சட்டமன்ற வளாகத்தில் அமர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர். கையில் பதாகைகளை தாங்கிய படி, பொய் வழக்கு போடாதே என முழக்கங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதோ அந்த வீடியோ…