• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

மேற்கு வங்க ஆளுநரை நீக்கக் கோரி வழக்கு

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநர் ஜகதீப் தங்கரை நீக்கக் கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல வழக்கறிஞர் ராம பிரசாத் சர்கார் என்பவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் மேற்கு வங்க மாநிலம் ஆளுநர் ஜகதீப் தங்கரை நீக்க வேண்டும் என்று அவர் முறையீடு செய்துள்ளார். ஆளுநர் ஜகதீப் தங்கர் அரசியல் அமைப்பு சட்டத்தின் எல்லைகளை மீறி மாநிலத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக மனுவில் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

தொடர்ச்சியாக அரசியல் அமைப்புக்கு முரணான அறிக்கைகளை வெளியிட்டு வரும் மேற்கு வங்க ஆளுநர், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் செய்தி தொடர்பாளர் போல் செயல்பட்டு வருவதாகவும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே மேற்கு வங்க ஆளுநர் பதவியில் இருந்து ஜகதீப் தங்கரை நீக்க வேண்டும் என்று பொதுநல மனுவில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாநில ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் வழக்கு இதுவென மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பொது நல மனு கொல்கத்தா நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா அமர்வில் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.