தமிழ்நாட்டைச் சேர்ந்த பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம். பரதநாட்டியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பல துறைகளிலும் பங்களித்து வருகிறார்.
பத்மா சுப்ரமணியம் தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே. சுப்ரமணியம் – மீனாட்சி தம்பதியினரின் மகள். இவரின் தாய் மீனாட்சி ஒரு இசையமைப்பாளர், தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பாடல் எழுதக்கூடியவர்.
பத்மா, வழுவூர் பி. இராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றார். பத்மா சுப்ரமணியம் இந்தியாவைப் போன்றே உலக நாடுகளிலும் மிகப் பிரபலமானவர்; இவருடைய சிறப்பைக் குறிக்கும் வகையிலும், மரியாதையின் பொருட்டும் ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் இவர் குறித்து ஆவணப்படங்கள், குறும்படங்கள் எடுத்துள்ளன.
பத்மா இசையில் இளங்கலையும், மரபிசையியலில் முதுகலைப் பட்டமும், நாட்டியத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் வாங்காத பெரும் விருதுகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வரிசையில் சங்கீத நாடக அகாதமி விருது, பத்ம பூஷன், கலைமாமணி விருது, பாரத சஸ்த்ர ரக்சாமணி, காளிதாஸ் சம்மன் விருதுகளை பெற்றுள்ளார்.இத்தகைய நாட்டிய தாரகை பத்மா சுப்ரமணியம் பிறந்த தினம் இன்று..!