‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், வரும் மார்ச் மாதம் 25-ம் தேதி வெளியாக உள்ளதாக, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமௌலி பிரமாண்ட பொருட்செலவில் இயக்கியுள்ள படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதற்கிடையில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், கடந்த ஜனவரி 7-ஆம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா மூன்றாவது அலை பரவலால் படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்தது படக்குழு. மேலும், இரண்டு புதிய வெளியீட்டுத் தேதிகளையும் கடந்த 21-ம் தேதி படக்குழு அறிவித்தது.
அதன்படி, ‘நாட்டில் தொற்றுநோய் நிலைமை சரியாகி தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கும் அனுமதி கிடைத்தால் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தினை வரும் மார்ச் 18-ம் தேதி வெளியிடுகிறோம். ஒருவேளை அப்போதும் வெளியிட முடியவில்லையென்றால் ஏப்ரல் 28-ம் தேதி வெளியிடுகிறோம்’ என்று இருந்த நிலையில், வரும் மார்ச் 25-ம் தேதி உலகம் முழுவதும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.