இந்தியா முழுவதும் நேற்று 73-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் அரசு அலுவலகங்களில் கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், கேரள துறைமுகங்கள், தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகத்துறை அமைச்சர் அகமது தேவர்கோவில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் ஏற்றிய தேசியக்கொடி தலைகீழாக இருந்தது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர், தேசியக்கொடியை உடனே கீழே இறக்கி, சரி செய்து, மீண்டும் நேராக ஏற்றினார்.
அதை தொடர்ந்து அங்கு நடைபெற்ற போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்று கொண்டார். இந்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாநிலத்தின் மந்திரியே தேசிய கொடியை தலைக்கீழாக ஏற்றலாமா என காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
அவர் பதவி விலக வேண்டும் என அம்மாநில பா.ஜ.க.வினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதையொட்டி தேசியக்கொடியை தலைகீழாக கட்டியது யார் என்று விசாரணை நடத்த மாவட்ட நீதிபதி மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு அமைச்சர் அகமது தேவர்கோவில் உத்தரவிட்டு உள்ளார்.