வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், வருமானத்தை விட கூடுதலாக 11.32 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக முன்னாள் அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் ரெய்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி. அதிமுகவை அழித்து, நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதே திமுகவின் நோக்கம்.
சட்டமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த மு.க.ஸ்டாலின் தயாரா..? அப்படி தேர்தலை நடத்தினால் ஒரு தொகுதியில் கூட திமுக ஜெயிக்காது. முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து சோதனை நடத்துவதா..? லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு நானும் தயாராக உள்ளேன். எப்போது வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் எனது வீட்டுக்கு வந்து சோதனை நடத்தலாம்” என்று கூறினார்.