உத்தரபிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அம்மாநில அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
உ.பி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ’நான் பெண்… நான் போராடுவேன்’ என்ற முழக்கத்துடன் பெண்களை ஒருங்கிணைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. இந்த பிரச்சாரத்தின் அட்டைப்பட விளம்பரத்தில் உத்தரபிரதேச மகிலா காங்கிரஸ் துணைப்பொதுச்செயலாளர் பிரியங்கா மவுரியாவின் புகைப்படம் இடம்பெற்றது. இதனால் பிரியங்கா மவுரியா உத்தரபிரதேச அரசியலில் பேசுபொருளாக மாறி வந்தார்.
இதையடுத்து பிரியங்கா மவுரியாவுக்கு வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் பிரியங்கா மவுரியாவுக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கவில்லை.
இந்நிலையில் பிரியங்கா மவுரியா காங்கிரசில் இருந்து விலகி இன்று பாஜகவில் இணைந்தார். உத்தரபிரதேச காங்கிரஸ் பேரணியின் முகமாக இருந்த பிரியங்கா மவுரியா பாஜகவில் இணைந்துள்ள நிகழ்வு காங்கிரசுக்கு பின்னடைவாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.