தேனி மாவட்டம், போடி பரமசிவன் மலைக்கோயில் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.
ஆண்டுதோறும் தைப்பூசத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம் போடி பரமசிவன் மலைக்கோயில் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள பால முருகன் கோயிலில் தைப்பூச விழா விமர்ச்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இன்று (ஜன.18) அதிகாலை 4 மணி முதல் மாலை 6 வரை கிரிவலப் பாதையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் காவி, மஞ்சளாடை அணிந்த பக்தர்கள் திரளாக தென்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பால், பன்னீர், இளநீர் மற்றும் மயில் கவடி எடுத்து முருகப்பெருமானுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். தேனி மாவட்ட சிவசேனா கட்சி மாவட்ட தலைவர் குரு ஐயப்பன் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட செயலாளர் முனீஸ் அபிஜித், பொதுச் செயலாளர் கருப்பையா ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் பலர் பால்குடம், காவடி எடுத்து முருகப்பெருமானை வழிபட்டனர். பக்த கோடிகள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி கிரிவலப் பாதையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.