தேனி அல்லிநகரம் நகராட்சி முன்பு இன்று (ஜன.19) காலை 10.30 மணிக்கு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய குடியரசு தினமான ஜன.26ம் தேதி, டில்லி குடியரசு தின விழாவில் தமிழகம் சார்பில் விடுதலை போராட்ட தியாகிகள் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., சிதம்பரனார், மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார் குறித்த அலங்கார வாகன ஊர்திகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதைக் கண்டித்து, இன்று காலை 10.30 மணிக்கு தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி நகர் குழுவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி நகர செயலாளர் எம்.எஸ்.பி., ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர். பெருமாள், மாநில குழு உறுப்பினர்கள் பெத்தாட்சி ஆசாத், திருமலைக் கொழுந்து முன்னிலை வகித்தனர். என்.சின்னையன், எம். கர்ணன், ஏ.அரசகுமாரன், ஏ.ஐ.டி.யூ.சி., அனைத்து தூய்மை பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் K.பிச்சைமுத்து மற்றும் டி.ஆர்.பாண்டி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.