• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

சீனாவுக்கு இலங்கை நெருக்கமாவதைத் தவிர்க்க சுப்பிரமணியன் சுவாமி யோசனை

சீனாவிற்கு இலங்கை நெருக்கமாவதைத் தவிர்க்க இலங்கை அரசிற்கு ஒரு கோடி அமெரிக்க டாலர் கடனை உடனடியாக வழங்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.


இலங்கை கடந்த சில மாதங்களாகவே கடுமையான பொருளாதார நிதி நெருக்கடியால் தவித்து வருகிறது. இதனால் அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை அனைத்தும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் இலங்கையில் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாவும் அந்நாட்டுப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக இலங்கைக்கு சீனா பெருமளவில், கடனை வழங்கி அந்நாட்டுப் பொருளாதார மையங்களை சீனா கையகப்படுத்தியும் வருகிறது.


இந்நிலையில் இலங்கை அரசுடன் நெருக்கமான உறவைப் பேணிவரும் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
‘மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசிற்கு இந்திய அரசு ஒரு கோடி அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பீல் ரூ.75 கோடி ) கடனாக வழங்குவதற்கு முன்வரவேண்டும். வெளிவிவகாரக் கொள்கையில் பல்வேறு விவகாரங்களிலும் தோல்வியடைந்திருக்கும் மத்திய அரசு இலங்கை விவகாரத்திலும் தோல்வியடையக் கூடாது.


இலங்கைக்கான கடனை உடனடியாக ஒதுக்கீடு செய்வதன் மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஓர் நீண்டகாலப் பங்காளியை இந்தியாவால் பெற்றுக்கொள்ளமுடியும். இல்லை என்றால் சீனாவிற்கு இலங்கை மிக நெருக்கமாவதைத் தவிர்க்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.