குஜிலியம்பாறை வட்டாட்சியர், தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் கம்யூனிஸ்ட் கட்சியினரைப் பற்றிய தகவல்களைத் திரட்டக் கோரி சுற்றறிக்கை அனுப்பியதாகவும், இடதுசாரி மாணவர்களின் போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் கூறப்படும் விவகாரங்களை கண்டித்து, பழனி ஆர்டிஓ அலுவலகம் முன்பு இன்று காலை 10 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. அருள்செல்வன் தலைமை வகித்தார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள், குஜிலியம்பாறை வட்டாட்சியர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களின் தகவல்களைத் திரட்டக் கோரி சுற்றறிக்கை அனுப்பியது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர். மேலும், இடதுசாரி மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் தலைமைச் செயலாளர் தலைமையிலான கூட்டத்தின் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர்.

கடும் எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த இரண்டு சுற்றறிக்கைகளும் திரும்பப் பெறப்பட்டதாக தெரிவித்த அவர்கள், இந்த விவகாரத்தில் தொடர்புடைய குஜிலியம்பாறை வட்டாட்சியர் மற்றும் தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். ராமசாமி, எஸ். கமலக்கண்ணன், கே. கந்தசாமி, தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் என். கனகு, மாவட்ட குழு உறுப்பினர் ஜி. கௌரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




