பல்லாவரம் தொகுதியில் அரசியல் வட்டாரங்களில் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. மாவட்டக் கழகச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்வில், மாவட்ட, பகுதி, ஒன்றிய, ஊராட்சி, வார்டு நிர்வாகிகள், சார்பு அணியினர் மற்றும் பத்திரிக்கை நிருபர்கள் கலந்து கொண்ட நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியான மின்னல் குமார் மீண்டும் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நற்பணி மன்றம் மூலமாகவும், பின்னர் தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சிக்காகவும் பணியாற்றி வரும் மின்னல் குமார், பல்லாவரம் பகுதியில் கட்சியின் அடையாள முகமாக செயல்பட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், சமீப காலமாக நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவரது புகைப்படம் மற்றும் பங்களிப்புகள் திட்டமிட்டு தவிர்க்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இன்று நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்விலும், மேடை அலங்காரங்கள், பேனர்கள் மற்றும் விளம்பரப் பதாகைகளில் மின்னல் குமாரின் புகைப்படம் இடம்பெறாதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்காக நீண்ட காலமாக உழைத்த ஒருவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது சாதாரண நிர்வாக தவறா அல்லது திட்டமிட்ட அரசியல் புறக்கணிப்பா என்ற கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர். மேலும், உள்கட்சி முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே இந்த நடவடிக்கையை சிலர் விமர்சித்து வருகின்றனர்.
மின்னல் குமார் ஆதரவாளர்கள், கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட நிர்வாகிகளுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் வெளியாகாத நிலையில், இந்த சர்ச்சை அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரத்தில் தொடர்ந்து எழுந்து வரும் இந்த புறக்கணிப்பு குற்றச்சாட்டு, எதிர்காலத்தில் கட்சியின் உள்நிலை அரசியலில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது தற்போது முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.





