மதுரை மாவட்டம் சோழவந்தான் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி ராஜலட்சுமி, அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், மதிய வேளையில் ராஜலட்சுமி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, முகத்தை மறைக்கும் வகையில் பர்தா அணிந்து வந்த இரண்டு பெண்கள், திடீரென வீட்டின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தனர்.

தூங்கிக் கொண்டிருந்த ஆசிரியை ராஜலட்சுமி சுதாரிப்பதற்குள், அவரது வாயில் துணியை வைத்து அடைத்து, கை மற்றும் கால்களைக் கட்டிப் போட்டுள்ளனர். பின்னர் அவரைப் பயங்கரமாகத் தாக்கிய அந்தப் பெண்கள், அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.

பட்டப்பகலில், சோழவந்தான் மையப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்க்குள் புகுந்து பெண்ணைக் கட்டிப்போட்டு நகையைப் பறித்து சென்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், சோழவந்தான் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய அந்த இரண்டு பெண்களை தீவிரமாக தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.





