விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த கிருஷ்ணன் கோயிலில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஆய்வாளர் கண்ணன் பொறுப்பில் இயங்கி வரும் இந்த அலுவலகத்தில் வாகனங்கள் உரிமம் புதிதாக வாங்குவதற்கும், புதுப்பிப்பதற்கும் தினமும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் லஞ்சம் வாங்கப்படுவதாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பெயரில் இன்று தனியார் வாகனத்தில் அலுவலகத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ஜாஸ்மின் தலைமையிலான அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர் இவர்கள் வந்ததை அறிந்த வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டதாகவும் ஆய்வாளர் கண்ணன் நீதிமன்ற வேலையாக சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் இடைத்தரர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் இன்று வரப்பட்ட ஆவணங்கள், அதன் கட்டண விபரம் மற்றும் அலுவலகத்தில் இருக்கும் ரொக்கப் பணம் உள்ளிட்டவை குறித்து சரி பார்த்தனர். இதில் தரகர்களிடம் இருந்தும் தனியார் வாகன பயிற்சி பள்ளி உரிமையாள் ராம்குமாரிடம் இருந்தும் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 100 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கு மேலாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





