மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமாணிக்கம் அடுத்துள்ள டி.மீனாட்சிபுரம் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் சென்று வருவதற்கு முறையாக பேருந்து வசதி வேண்டும் என அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் உசிலம்பட்டியில் இருந்து கோடாங்கிநாயக்கன்பட்டி, தாடையம்பட்டி, திருமாணிக்கம் வழியாக எம்.கல்லுப்பட்டி வரை அரசு பேருந்து சென்று வந்த நிலையில் பேருந்து முறையாக வராமல் அவ்வப்பொழுது ஒரு நாள் வந்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று திடீரென உசிலம்பட்டியில் இருந்து எம்.கல்லுப்பட்டி செல்லும் அரசு பேருந்தை மறித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த சேடப்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக பேருந்து வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.




