மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான 100 நாள் வேலையை தொடர்ந்து வழங்கிடு, அரசு நிர்ணயித்த கூலியை வழங்கிடு, வருகை பதிவேட்டில் ஜிபிஆர்எஸ் போட்டோ எடுப்பதில் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்காதே, 100 நாள் வேலையில் பணி நேரம் 4 மணி நேரம் என்பதை உறுதிப்படுத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் முருகன் தலைமையில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் சேடப்பட்டி ஒன்றியத்தில் மல்லபுரம், சீல்நாயக்கன்பட்டி, அத்திபட்டி, டி. இராமநாதபுரம், குடிச்சேரி உள்ள ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக பணி வழங்கப்படவில்லை எனவும் மற்ற ஊராட்சிகளில் குறைவான வேலைப் பணிகள் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.




