மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் இன்று முகூர்த்த நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு வாகனங்களின் வரத்து அதிகரித்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுங்கச்சாவடியை கடந்து செல்ல கார்கள், வேன்கள், பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் திரண்டதால், சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
குறிப்பாக திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தும் பணிகள் மெதுவாக நடைபெற்றதாலும் இந்த நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கப்பலூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் சிரமம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்து எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.




