விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் திடீரென மதியம் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த இடி, மின்னலுடன், மழை பெய்யத் தொடங்கியது.

ஆனால் வழக்கத்திற்க்கு மாறாக அதிக வேகத்துடன் சூறைக்காற்று வீசியதால் கொட்ட மடக்கிபட்டி, பகுதியில் மரம் வேருடன் சாய்ந்தது. மேலும் தனியாருக்கு சொந்தமான மாட்டு தொழுவத்தின் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூறை முழுவதும் சேதம் அடைந்தது. மகாலட்சுமி என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் மரக்கிளை ஒடிந்து விழுந்ததால் ஓடுகள் சேதம் அடைந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. அன்னபூரணியாபுரத்தில் இருந்து சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், மற்றும் பெட்ரோல் பங்க் அருகில் இருந்த நான்கு மரங்களும் வேருடன் சாய்ந்து விழுந்தது. அருகில் யாரும் இல்லாததால் சேதம் ஏற்படவில்லை.

தனியார் தொடக்கப்பள்ளி அருகிலும் அம்மையார்பட்டி செல்லும் வழியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள மின்கம்பம் முறிந்து விழுந்ததால் உயர் மின் அழுத்த மின்சாரம் செல்லக்கூடிய வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அம்மையார்பட்டி துணை மின் நிலையம் , வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்தும் பணியாளர்கள் விரைந்து வந்து அறுந்த மின்கம்பிகளை சீரமைத்தும் சாய்ந்த மரங்களில் கிளைகளை வெட்டி போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
தொடர்ந்து இடி, மின்னல், காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமையார்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின்தடை செய்யப்பட்டது. இதனால் துலுக்கன்குறிச்சி அலமேலுமங்கைபுரம், அன்னபூரணிபுரம், அம்மையார்பட்டி, சக்கம்மாள்புரம் ,கீழாண்மறை நாடு, சமத்துவபுரம் ,இனம் மீனாட்சிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டது.



