• Tue. May 26th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

தவெகவில் சேர்க்கும் முயற்சிகள் நடக்கின்றன. இது நல்ல அறிகுறி இல்லை-திருமாவளவன்..,

BySeenu

May 26, 2026

கோவை விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்று இன்று கோவையிலும், நாளை உதகையிலும், அதன்பின்னர் சென்னையிலும் பயணம் உள்ளது. 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் உள்ளனர்.

இதில் பாதுகாப்புத்துறை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் பங்கேற்கும் அனுபவம் கிடைத்துள்ளது.

பெரம்பலூரில் நடைபெற்ற திமுக – விசிக இடையே ஏற்பட்ட அடிதடி சம்பவம் கவலை அளிக்கிறது. இந்த விரும்பத்தகாத நிகழ்வு வேதனை அளிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சமூக வலைதளங்களில் வரும் அவதூறுகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம்.

ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை கேள்விப்பட்டு, அதனை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தேன். மாவட்ட முன்னணிப் பொறுப்பாளர்கள் அதனைத் தவிர்த்துவிட்டார்கள். தகவல் அறியாதவர்களும் அங்கு கூடியிருந்தனர்.

அங்கு திமுகவினரும் கூடியிருந்தனர். தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளுக்கு இயக்கத்தோழர்கள் இடம்கொடுக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

தவெக – அதிமுக நிர்வாகிகள் இணைவது ஆரோக்கியமான அரசியலாக விசிக கருதவில்லை.

இந்த ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவும், குடியரசுத் தலைவர் ஆட்சி இங்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், இடதுசாரி கட்சிகளோடு இணைந்து விசிக எங்கள் ஆதரவை கொடுத்துள்ளது.

வெளியில் இருந்து ஆதரவு என்று தவெக அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, இப்போது அமைச்சரவையிலும் இடம்பிடித்திருக்கிறோம்.

இந்த நிலையில், தவெக தலைவருக்கும், பொறுப்பாளர்களுக்கும் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், எந்த சூழலிலும் உங்கள் ஆட்சியை கவிழ்க்க மாட்டோம். அந்த நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும்.

விமர்சனங்களுக்கு தவெக தலைமையிடம் இடம் கொடுக்கக்கூடாது. அதிமுக இதுபோன்ற நெருக்கடிகளை சந்திக்கும் என்று நான் முன்பே கூறியுள்ளேன்.

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் தான், அதிமுகவின் ஆதரவைப் பெறுவதில் தவெகவுக்கு நெருடல் இருந்ததாக தவெக தலைவர்கள் கூறியுள்ளனர். ஒருவேளை அதிமுக தனித்து தேர்தலை சந்தித்திருந்தால், அவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் முடிவை தவெக எடுத்திருக்கும்.

அதுமட்டுமன்றி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவை நாடியதற்கும், அதிமுக – பாஜக உறவே காரணம் என்று தவெக தலைவர்கள் கூறியுள்ளனர். அதனால் தான் இன்று அதிமுக நெருக்கடி நிலையை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது என்று கருதுகிறேன்.

தவெக தலைமை இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கக்கூடாது. யார் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தாலும், அவர்களை கட்சியில் சேர்த்துக்கொள்வது தவெக மீதான நம்பகத்தன்மையை பாதிக்கும். எனவே இதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

எனவே கட்சிகளின் ஆதரவுடன் இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என்ற நம்பிக்கையுடன் தவெக செயல்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

இந்த சந்தேகம் இருப்பதால் தான், அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து வருபவர்களை தவெகவில் சேர்க்கும் முயற்சிகள் நடக்கின்றன என்று விமர்சனங்கள் வருகின்றன. இது நல்ல அறிகுறி இல்லை என்றும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டு அரசியலில் தலித்துகளுக்கு இவ்வளவு பேருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருப்பது இதுவே முதல் முறை. கர்நாடகத்தில் ஏற்கனவே 7 பேர் வரை தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருப்பது எடுத்துக்காட்டாக உள்ளது. சில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்திருப்பது, அந்த சமூகத்திற்கான அங்கீகாரமாகும். அது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.