செங்கல்பட்டு மாவட்டம் மதுராப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மூலச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள மூலச்சேரி ஏரி, CSR நிதியின் மூலம் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டது.

சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் CSR நிதி ஆதரவுடன், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த புனரமைப்பு பணிகளின் ஒப்படைப்பு விழா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கில்லி சரத்குமார் கலந்து கொண்டு திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவித்தார்.

சுமார் 13.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் களைகள் அகற்றுதல், தூர்வாருதல், ஆழப்படுத்துதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் போன்ற முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த புனரமைப்பின் மூலம் ஏரியின் நீர்த்தேக்க திறன் கூடுதலாக 6,900 கிலோ லிட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த திட்டம் நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கும், நீர்வள பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் முக்கிய பங்காற்றும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.




