கோவை மாவட்டம் மதுக்கரை அருகே செயல்பட்டு வரும் மல்லையன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி மற்றும் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று கல்வித்துறையில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.

இப்பள்ளியை சேர்ந்த மாணவி ஸ்னேகா, 600க்கு 597 மதிப்பெண்கள் பெற்று கோவைக்கு உட்பட்ட பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் முதலிடத்தையும், மாநில அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அவரது இந்த அபார சாதனை பள்ளி வளாகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், இதே பள்ளியில் பயின்ற மாணவி வித்யா ஸ்ரீ 595 மதிப்பெண்களும், மாணவி நேஹா 581 மதிப்பெண்களும் பெற்று கவனம் ஈர்த்துள்ளனர்..
இந்த சாதனையை கொண்டாடும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
ஸ்ரீ பி.மல்லையன் மெட்ரிக் பள்ளியின் தாளாளரும்,தலைவருமான சண்முகம் தலைமையில் நடைபெற்ற விழாவில், சாதனை மாணவிகள் மேடைக்கு வருகை தந்தபோது, பள்ளி ஆசிரியைகள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி கைகளை தட்டி மாணவிகளை உற்சாகமாக வரவேற்றனர்.
எல்.கே.ஜி.முதல் இதே பள்ளியில் பயின்ற மாணவிகள் மூன்று பேரும் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளது, பள்ளியின் தரமான கல்வி முறையை வெளிப்படுத்துவதாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.
பள்ளியின் செயலாளர் சரவணன், பொருளாளர் ஜெயக்குமார், நிர்வாக அறங்காவலர்கள் ருக்மணி துரைசாமி, மனோன்மணி சண்முகம், சந்தோஷ் மல்லையன் உள்ளிட்டோர் மாணவிகளை பாராட்டினர்..

நிகழ்ச்சியில் பேசிய பள்ளி முதல்வர் ரேகா மணிகண்டன் , “மாணவர்களின் வெற்றிக்கு ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களின் கடின உழைப்பே காரணம். எதிர்காலத்திலும் பள்ளி மாணவர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்..
இந்த பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் உற்சாகமான சூழலை உருவாக்கியதுடன், பிற மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் நிகழ்வாக அமைந்தது.



