தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி நடந்து முடிந்தது.
வரும் மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 தொகுதிகளில் பதிவான வாக்கு எந்திரங்கள் 3 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்கு எந்திரங்கள் ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர். ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்கு எந்திரங்கள் லயோலா கல்லூரி மையத்திலும், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்திலும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கு சென்னையில் இன்று பயிற்சி அளிக்கப்படுகிறது. வாக்குப்பதிவு எந்திரங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றி விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட உள்ளன.




