புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி தனி தொகுதி ஆகும். இப்பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் தொகுதி மறு சீரமைப்புக்குப் பின் கடந்த 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற பொது தேர்தலை சந்தித்து இருக்கிறது. இதில் அதிமுக முதல் முறை வெற்றி பெற்ற போது, சுப்பிரமணியன் என்பவர் வெற்றி பெற்று அமைச்சரானார். அடுத்த முறை அதே தொகுதியில் நார்த்தாமலை ஆறுமுகம் என்பவர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2021 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எம். சின்னத்துரை வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். திமுக கூட்டணியில் ஏற்கனவே நாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகள் எல்லாம் எங்களுக்கு மீண்டும் வேண்டும் என்று கேட்டு பெற்ற தொகுதிகளில் ஒன்று கந்தர்வகோட்டை ஆகும். இந்த நிலையில் என் டி ஏ கூட்டணியில் ஏற்கனவே வெற்றி பெற்ற அ திமுகவிற்குப் பதிலாக பாஜகவிற்கு ஒதுக்கியதில் கட்சியின் மாநில துணை செயலாளர் புரட்சி கவிதாசன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் நதியா தமிழரசன் என்பவர் போட்டியிடுவார் என்று எட்டு மாதங்களுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஏற்கனவே அதிமுகவில் இருந்து வெற்றி பெற்று அமைச்சரான சுப்பிரமணியன் கட்சியில் இருந்து விலகி ஒதுங்கி இருந்து இப்போது தவெக வில் சேர்ந்து தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் தான் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டாலும் கூட வேட்பாளர் யார் என்பது தெரியாமல் இருந்தது. ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்த சின்னத்துரைக்கு தான் சீட் கொடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும் இப்போது மாவட்ட செயலாளராக இருக்கும் சங்கருக்கு தான் ஒதுக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும் தொடர்ந்து வாதிட்டு வந்ததால் கட்சியின் தலைமை முடிவு செய்ய முடியாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் சின்னத்துரைக்கே அந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்று தலைமை எடுத்த முடிவின்படி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மீண்டும் களத்தில் இறங்கி இருக்கிறார் சின்னதுரை.





