மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் சரிவர வராததால் பொதுமக்கள் பயணிகள் தினசரி பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்
குறிப்பாக திருமங்கலம் செக்கானூரணி செல்ல வேண்டிய பயணிகள் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது அதிலும் இரவு ஆறு மணிக்கு மேல் பேருந்துகள் முறையாக வருவதில்லை.

இதற்கு காரணம் மொத்தம் உள்ள பேருந்துகளில் மூன்று பேருந்துகள் திருமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்தும் மூன்று பேருந்துகள் செக்கானூரணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்தும் வருகிறது. ஒரே ஒரு பேருந்து மட்டும் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து சென்று வருகிறது இதன் காரணமாக இரவு ஆறு மணிக்கு மேல் வரவேண்டிய பேருந்துகள் திருமங்கலம் மற்றும் செகானூரணி அரசு போக்குவரத்து பணிமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ள காரணத்தால் மூன்று பேருந்துகள் நான்கு பேருந்துகள் என மொத்தமாக வந்து செல்கிறது.

இதனால் செக்கானூரணி சென்று தேனி கம்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகளும் திருமங்கலம் சென்று விருதுநகர் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகளும் பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு ஏழு மணி முதல் சுமார் 9 மணி வரை சோழவந்தான் பேருந்து நிலையத்தில் திருமங்கலத்திற்கு செல்ல வேண்டிய பேருந்துகள் வராத நிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துக்காக காத்திருந்தனர்.
குறிப்பாக சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பேருந்தை எதிர்பார்த்து காத்திருந்தது பார்க்க பரிதாபமாக இருந்தது வயதான பெண்கள் பேருந்து நிலையத்திற்குள் படுத்து உறங்கி விட்டனர். இதில் உச்சகட்டமாக
வைகை எக்ஸ்பிரஸில் சென்னையிலிருந்து வந்த மாற்றுத்திறனாளி இளைஞர் திருமங்கலம் சென்று அங்கிருந்து தனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல வேண்டிய நிலையில் 7 40 மணி முதல் 9 மணி வரை பேருந்துக்காக காத்திருந்த நிலையில் குறைந்த அளவு மின்விளக்குகளே இருந்ததால் பேருந்து நிலையம் கும்மிருட்டாக இருந்தது. இதனால் பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியான நிலையில் இருந்தது.

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட்டு மைதானம் போல் பேருந்து நிலையத்திற்குள் விளையாட வைத்து பொழுதை போக்கினர். பேருந்து நிலையத்திற்குள் வந்த ஒவ்வொரு பேருந்தையும் நிறுத்தி பேருந்தின் பெயர் பலகையை திருமங்கலம் என்று மாற்றி திருமங்கலத்திற்கு எப்படியாவது செல்லுங்கள் என ஒவ்வொரு ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் பயணிகள் கெஞ்சியது மிகவும் பரிதாபமாக இருந்தது.
ஒரு வழியாக 8 50 மணி அளவில் செக்கானூரணிக்கு செல்ல வேண்டிய பேருந்து சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் வந்தது. அதில் முண்டியடித்து 50க்கும் மேற்பட்ட பயணிகள் ஏறி அமர்ந்தனர். அதன் பிறகு நடத்துனர் திருமங்கலம் செல்ல வேண்டிய பேருந்து இனிமேல் தான் வரும் இந்த பேருந்து செக்கானூரணி வரை தான் செல்லும் என கூறிய நிலையில் பேருந்தில் ஏறிய 50 க்கு மேற்பட்டோர் பேருந்தை விட்டு கீழே இறங்கினர்.
பின்னர் திருமங்கலம் பேருந்து வந்த நிலையில் அதில் ஏறி அமர்ந்தனர் அதனைத் தொடர்ந்து மேலும் ஒரு திருமங்கலம் பேருந்து வந்ததால் பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் எந்த பேருந்து முதலில் செல்லும் என்ற நிலையில் குழப்பத்தில் இருந்தனர். பின்னால் வந்த பேருந்தை ஓட்டுநர் உடனடியாக எடுக்க முயற்சித்ததால் ஏற்கனவே ஏறி அமர்ந்த பேருந்தில் இருந்து அனைவரும் மீண்டும் இறங்கி பின்னால் வந்த பேருந்தில் ஏறி அமர்ந்தனர். அதன் பின்பு திருமங்கலம் செல்லக்கூடிய மேலும் ஒரு பேருந்து வந்தது இரண்டு மணி நேரம் கழித்து 10 நிமிட இடைவெளியில் சுமார் நான்கு பேருந்துகள் அடுத்தடுத்து வந்ததால் பயணிகள் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றனர்.
இதே போன்று செக்கானூரணியிலும் 2 மணி நேரமாக சோழவந்தான் பேருந்து வராததால் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்ததாக பேருந்தில் இருந்து இறங்கிய பயணி ஒருவர் விரக்தியுடன் கூறினர். மேலும் அவர் கூறுகையில் போக்குவரத்து பணியாளர்களை சொல்லி குற்றமில்லை அதிகாரிகள் தான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகள் சொன்னால் பேருந்தை முறையாக குறிப்பிட்ட நேரத்திற்குள் பணியாளர்கள் இயக்குவார்கள் ஆகையால் அதிகாரிகள் தான் பேருந்தை முறையாக இயக்க ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்
நான் கட்டிட தொழில் செய்து வருகிறேன் 6 மணிக்கு செக்கானூரணி பேருந்து நிலையத்திற்கு வந்த நிலையில் சோழவந்தான் பேருந்து வராததால் இரண்டு மணி நேரம் காத்திருந்தேன் தற்போது தான் சோழவந்தான் வந்து சேர்ந்தேன் இனிமேல் நான் வீட்டிற்கு சென்று நாளை காலை மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டும்.
தினசரி இதேபோன்று பேருந்து இல்லாத நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வேலைக்கு சென்று வருகிறேன் அதிகாரிகள் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று கூறினார்

கடந்த ஐந்து ஆண்டுகளாக சோழவந்தானிலிருந்து திருமங்கலம் செல்ல வேண்டிய பேருந்துகளில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது ஆட்சி மாறிய பின்பும் அதே நிலை தொடர்வதாக பொதுமக்கள் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இனிவரும் காலங்களிலாவது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சோழவந்தானிலிருந்து திருமங்கலத்திற்கும் திருமங்கலத்தில் இருந்து சோழவந்தானிற்க்கும் குறிப்பிட்ட இடைவெளியில் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனைக்கு கூடுதல் பேருந்துகளை வழங்கி திருமங்கலத்தில் இருந்து 9 மணிக்கு மேல் சோழவந்தானுக்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





