கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆண்கள் தங்கும் விடுதியில் புகுந்து பைக் மற்றும் பொருட்களைத் திருட முயன்ற வடமாநில வாலிபர், அங்கு இருந்த இளைஞர்களிடம் கையும், களவுமாக மாட்டி, தப்பிக்க வழியின்றி அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட சுவாரசியமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, துடியலூர் அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குப் பணி புரியும் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் ஏராளமான இளைஞர்கள் தங்கி வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில், விடுதியில் தங்கி இருந்தவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது, அந்த விடுதியின் வாசல் பகுதிக்கு நைசாக வந்த வடமாநில வாலிபர் ஒருவர், விடுதியின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் ஒன்றின் பூட்டை உடைத்து, அதனைத் திருடத் தீவிரமாக முயற்சி செய்து உள்ளார்.
நீண்ட நேரம் முயன்றும் பைக்கை லாக் எடுக்க முடியாததால், அந்த ஆசாமி நழுவி விடுதியின் உள்பகுதிக்குள் நுழைந்து உள்ளார். அங்கு வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் மொபைல் போன்களைத் திருட முயன்ற போது, திடீரென விடுதியில் தங்கி இருந்த இரண்டு இளைஞர்கள் இரவு பணி முடிந்து அறைக்கு வெளியே வந்து உள்ளனர். முன் பின் தெரியாத நபர் நள்ளிரவில் விடுதிக்குள் அலைவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள், “யார் நீ? நள்ளிரவில் இங்கே என்ன செய்கிறாய்?” என்று கேள்விகளை எழுப்பி, அவனைத் தப்பிக்க முடியாதவாறு சுற்றிலும் வளைத்துப் பிடித்தனர்.
இளைஞர்களிடம் கையும், களவுமாக மாட்டிக் கொண்டதை உணர்ந்த அந்த வடமாநிலத் திருடன், அங்கு இருந்து தப்பியோட வழி தேடினான். ஆனால், இளைஞர்கள் விடாமல் பிடித்துக் கொண்டதால், உடனடியாகத் தந்திரமாகத் தப்பிக்க நினைத்த அவன், அந்த இளைஞர்களின் காலில் பொத்தென்று விழுந்து, “என்னை விட்டுவிடுங்கள்… தெரியாமல் செய்து விட்டேன்” என்று கைகளைக் கூப்பி, இந்தி மற்றும் அரைகுறை தமிழில் அழுது மன்னிப்புக் கேட்கத் தொடங்கினான்.

அவன் காலில் விழுந்து கதறிய நாடகத்தை நம்பாத விடுதி இளைஞர்கள், இதுகுறித்து உடனடியாகத் பெரியநாயக்கன் பாளையம் காவல் துறையினருக்கு அவசரத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸாரிடம் அந்த வடமாநில வாலிபர் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார். அவனைப் போலீஸார் கைது செய்து, அந்த பகுதியில் உள்ள மற்ற விடுதிகள் மற்றும் வீடுகளில் நடந்த திருட்டுச் சம்பவங்களிலும் இவனுக்குத் தொடர்பு உள்ளதா ? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





