திருப்பூரில், வேலை செய்த நிலுவை தொகையை கேட்க சென்ற பெண் மீது பனியன் நிறுவன உரிமையாளர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், கருவலூரை சேர்ந்தவர் கீதா. இவரது கணவர் கார்த்திக். இவர்கள் இருவரும் பனியன் நிறுவனங்களில் ஜாப்ஆர்டர் எடுத்து வேலை செய்து வருகின்றனர். இவர்களிருவரும், திருமுருகன்பூண்டி – அண்ணா நகரில், பனியன் நிறுவனம் நடத்தி வரும் சித்தையன், அவரது மகன் பிரதீப் ஆகிய இருவருரிடமும் ஜாப் ஓர்க் ஆர்டர் எடுத்து செய்து வந்தனர்.
இந்நிலையில் செய்த வேலைக்கான நிலுவை தொகையை கேட்க கணவன்-மனைவி இருவரும் சென்ற பொழுது, சித்தையன், பிரதீப் ஆகிய இருவரும், தகாத வார்த்தைகளால் கீதாவை திட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து, கீதா திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து பனியன் நிறுவனம் சென்ற திருமுருகன்பூண்டி போலீசார், பனியன் நிறுவன உரிமையாளர்கள் சித்தையன், பிரதீப் மற்றும் அங்கு பணி புரிந்த தொழிலாளர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சித்தையன், பிரதீப் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவும் செய்துள்ளனர். வேலை செய்ததற்கான நிலுவை தொகையை கேட்க சென்ற பெண்ணை, பனியன் நிறுவன உரிமையாளர்களான தந்தை, மகன் இருவரும் பெண் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இச்சம்பவம் அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.