தமிழ் கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் படைவீடான மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா மார்ச் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று பங்குனித் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று வெள்ளி பூத வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து ஏப்ரல் 3 ம் தேதி இரவு 7 மணிக்கு முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடைபெறும். பங்குனி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 4 ம் தேதி மீனாட்சி அம்மன், சொக்கநாதர், பிரியாவிடை முன்னிலையில் முருகப்பெருமான் தெய்வானை அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஏப் 5 ஆம் தேதி பெரிய தேரோட்டம் நடைபெறும். இதற்காக காலை 6 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் முருகப்பெருமான் தெய்வானையோடு எழுந்தருளி கிரி வீதி வழியாக சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.





