மதுரை விமான நிலையம் அருகே உள்ள வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து எரிந்து வருகிறது. நேற்று முந்தினம் மதியம் ஏற்பட்ட தீ, இன்று மூன்றாவது நாளாக தீயை முழுமையாக கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளை மதுரை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர் வெங்கட்ராமன் நேரில் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். தீ பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதுரையில் 4-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மதுரை மாநகராட்சியின் தண்ணீர் லாரிகளும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ வேகமாக பரவி வருவதால், தீயணைப்பு வீரர்களுக்கு சவாலான சூழல் நிலவுகிறது.

குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயால் உருவான அடர்ந்த புகை, அவனியாபுரம், சிந்தாமணி, சாமநத்தம், பெருங்குடி, வெள்ளக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவி, அப்பகுதிகள் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். தீயை முழுமையாக அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.





