கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக உள்ளது.

வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானை ஊருக்குள் நுழைந்து சேதங்களை விளைவித்து செல்கிறது. அதன்படி இன்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டுயானை கதிர் நாயக்கன்பாளையம் ரேணுகா புரம் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளது.
அப்பொழுது அங்கு கட்டிட வேலை ஒன்று நடைபெற்று வரும் நிலையில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த பொழுது அங்கு தங்கி பணிபுரியும் கட்டிட தொழிலாளி ஒருவர் சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்பொழுது யானையைப் பார்த்ததும் அவரது வாகனத்தை பத்திரபடுத்த முயன்ற நிலையில் யானை அவரை விரட்டி தாக்குவதற்கு முயன்றுள்ளது. யானையிடமிருந்து ஓடி சென்று அவர் நூலிழையில் ஓரிரு காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளார். தற்பொழுது அந்த சிசிடிவி காட்சிகளும் யானை ஊருக்குள் சுற்றி திரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் வனத்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் இயங்கி வரும் சி ஆர் பி எப் வளாகத்திற்குள் நுழைந்து சமையலறையில் இருந்த பொருட்களை சாப்பிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.



