பழனி அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.92,500 தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பழனியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில், உடுமலையிலிருந்து வந்த காரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 92,500 ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பழனி – உடுமலைப்பேட்டை சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது உடுமலையிலிருந்து பழனி நோக்கி வந்த கார் ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். காரை ஓட்டி வந்த சீனிவாசன் என்பவரிடம் நடத்திய விசாரணையில், அவர் உரிய ஆவணங்களின்றி 92,500 ரூபாய் ரொக்கப் பணம் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. தேர்தல் விதிமுறைகளின்படி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆவணமின்றி கொண்டு வரப்பட்டதால், அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தொகை பழனி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.




