விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் சிக்கல்களில் சிக்கியுள்ள நிலையில், இன்று சென்னையில் உள்ள மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் (CBFC) மறுஆய்வுக் குழுவின் முன்பாகத் திரையிடப்படுகிறது.

முன்னதாக மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தத் திரையிடல், குழு உறுப்பினர் ஒருவரின் உடல்நலக்குறைவு காரணமாகத் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது பிரபல கன்னட இயக்குநர் டி.எஸ்.நாகபரணா தலைமையில் இந்த ஆய்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் (MCC) அமலில் உள்ளன.
எனவே, படத்தில் அரசியல் ரீதியான சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கருதப்பட்டால், தேர்தல் முடியும் வரை படத்தை வெளியிடத் தடை விதிக்கப்படலாம் என்ற அச்சம் படக்குழுவினரிடையே நிலவுகிறது.
படத்தின் எதிர்காலம் மற்றும் வெளியீட்டுத் தேதி அனைத்தும் இன்று மறுஆய்வுக் குழு எடுக்கும் முடிவைப் பொறுத்தே அமையும் என்பதால், திரையுலகினரும் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.



