தமிழ்நாடு2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

இன்னும் ஒரு மாதம் ஒரு வார காலம் மட்டுமே அவகாசம் இருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சியும் மட்டும்தான் பல மாதங்களுக்கு முன்பே வேட்பாளர்களை அறிவித்து விட்டது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு பெண் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் ஆண் வேட்பாளர் போட்டியிடுகிறார். இந்த நிலையில் தான் அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு நடத்திக் கொண்டிருக்கிறது. வேட்பாளர் தேர்வு முடிந்த பிறகுதான் அந்தந்த வேட்பாளர்கள் சார்பில் பரப்புரை வாகனங்கள் தயாரிக்கப்படும்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் முன்கூட்டியே வேட்பாளர் அறிவித்து விட்டதால் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிடும் எழிலரசி என்பவர் சில வாரங்களுக்கு முன்பே புதுக்கோட்டையில் பேருந்து நிலையம் அருகிலேயே ஒரு இடத்தை வாடகைக்கு பிடித்து தேர்தல் அலுவலகமும் அமைத்து விட்டார். நேற்று வரை தேர்தல் அலுவலகத்திலும் அந்த அலுவலகம் இருக்கும் சாலையிலும் நாம் தமிழர் கட்சியின் கொடிகள் பறந்து கொண்டு இருந்தன. தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்தவுடன் அந்த கொடிகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன.
இந்த நிலையில் தான் மற்ற வேட்பாளர்கள் யார் என்றும் தெரியவில்லை யார் எங்கு பிரச்சார வாகனங்களை தயார் செய்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாத நிலையில் புதுக்கோட்டை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எழிலரசி புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் உள்ள கைக்குறிச்சி என்ற இடத்தில் ஒரு லேத் பட்டறையில் தேர்தல் வாக்கு சேகரிப்பு பரப்புரை வாகனம் திறந்த நிலையில் இருக்குமாறும் அதற்கு மேல் நிழல் தரும் வகையில் மூடி போட்டு வெயில் தாக்காத அளவிற்கு தயார் செய்து வருகிறார். நான்கு நாட்களாக இந்த பணி நடைபெற்று வருகிறது. சுமார் 15,000 ரூபாய் செலவில் இந்த வண்டி புணரமைக்கப்படுவதாக தெரிய வருகிறது.

கடந்த கால அரசியல் வரலாற்றில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் புதுக்கோட்டையில் பிரச்சாரம் செய்த போது இதுபோல் நிழற்குடையுடன் கூடிய வண்டியில் வந்து பிரச்சாரம் செய்ததாகவும் தெரிய வருகிறது. அதை வேறு எந்த தலைவர்களோ வேட்பாளர்களோ செய்யாத நிலையில் தற்போது புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எழிலரசியின் பிரச்சாரத்திற்காக முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது. இந்த வாகனத்தை மற்ற வேட்பாளர்கள் பார்த்தால் தாங்களும் அதேபோல் இந்த வெயில் கால தேர்தல் பரப்புரையில் தயாரித்துக் கொண்டு வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பையும் இந்த வாகனம் ஏற்படுத்தியிருக்கிறது.



