கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்கு மார் (40). தேங்காய் பறிக்கும் தொழிலாளியான இவர், சுல்தான்பேட்டை எஸ்.குமாரபாளையம் கிராமத்தை சேர்ந்த சரண்யா என்பவரை 11 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுதிக்ஷன் (9) என்ற மகனும் யக்சிதா ஸ்ரீ (6) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கருத்து வேறுபாட்டால் கடந்த 5 ஆண்டுகளாக தம்பதியர் பிரிந்து இருந்தனர். சரண்யா குழந்தைகளுடன் குமாரபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். சதீஷ்குமார் அவ்வப் போது குமாரபாளையம் சென்று தனது குழந்தைகளை பார்த்து வருவது வழக்கம். இந்த நிலையில், சதீஸ்குமார் கடந்த 3-ம் தேதி மாயமானதாக சரண்யா அளித்த புகாரின் பேரில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சதீஸ்குமாரை வதம்பச்சேரி வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் தாக்கி காரில் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து முருகனை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

போலீசாரின் விசாரணையில் சரண்யாவின் பெரியம்மா மகளான சுகன்யாவின் கணவர் முருகன் என்பதும் முருகனுடன் கடந்த 5 ஆண்டுகளாக சரண்யாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஷ்குமாருக்கு மனைவியின் கள்ளத்தொடர்பு குறித்து தெரிய வர தனது மனைவியையும் முருகனையும் கண்டித்து உள்ளார். இதனால் இருவரும் ஆத்திரம் அடைந்தனர். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி மதியம் செஞ்சேரிமலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் முருகன் தனது நண்பர்கள் கட்டிடத் தொழிலாளிகளான திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் (30), வடுகபாளையம் பகுதியைசேர்ந்த சிவலிங்கம் (24) மற்றும் 17 வயது சிறு வன் ஆகியோருடன் மது அருந்தி உள்ளார். அப்போது சதீஷ்குமார் குமாரபாளையத்தில் உள்ள தனது குழந்தைகளை பார்த்து விட்டு திரும்ப செஞ்சேரிமலை நோக்கி, இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்று கொண்டு இருந்தார். இதன் இடையே சரண்யா தனது கள்ளக் காதலனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சதீஸ்குமார் தன்னிடம் தகராறு செய்ததாக கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் தனது நண்பர்களான கோபிநாத், சிவலிங்கம் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நால்வருடனும் எதிரே வந்த சதீஸ்குமாரை வலுக் கட்டாயமாக வழிமறித்து, வாகனத்தில் இருந்து இறக்கி அடித்து காரில் ஏற்றி உள்ளனர். மேலும் தாக்கும் போது, அவரது அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க காரில் பாட்டு சத்தம் அதிகமாக வைத்து உள்ளனர். பின்னர், பெரிய வதம்பச்சேரி PAP வாய்க்கால் பாலம் அருகே காரில் இருந்து சதீஷ்குமாரை இறக்கி வாய்க்கால் அருகே அமர்ந்து மது அருந்திய நால்வரும் சதீஷ்குமாரை பீர் பாட்டிலால் தலையில் தாக்கி கொலை செய்ததோடு, அங்கு உள்ள வாய்க்காலில் உடலை வீசிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து சதீஸ்குமாரின் உடலை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் மூலம் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பகுதியில் நாதேகவுண்டன் பாளையம் பகுதியில் வாய்க்காலில் மிதந்த சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து சரண்யா அவரது கள்ளகாதலன் முருகன், மற்றும் கோபிநாத், சிவலிங்கம், 17 வயது சிறுவன் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து திட்டமிட்டு கடத்திச் சென்று தாக்கி கொலை செய்ததோடு, உடலை வாய்க்காலில் வீசி விட்டு சகஜமாக ஊருக்குள் சுற்றி வந்ததும், தனது கணவன் மாயமானதாக புகார் அளித்து விட்டு மனைவி நடத்திய நாடகம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது..



