நிலக்கோட்டை அருகே செங்கோட்டையில் நடைபெற்ற ஸ்ரீஆதாளி அம்மன்,கம்பத்தடியான் கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய மாடு விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஆதாளி அம்மன், ஸ்ரீ கம்பத்தடியான் கோவில் மாசி மாத திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது..
கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் முதல்நாள் சீரகம்பட்டி, கொக்குப்பட்டி,சுட்டிகாலாடிபட்டி ஆகிய கிராமங்களில் இருந்து பெட்டி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது, அதனை தொடர்ந்து அம்மன் பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு தாரை தப்பட்டை வானவேடிக்கைகள் முழங்க முளைப்பாரியுடன் அம்மன் அழைப்பு நடைபெற்றது,

பச்சை குடிசையில் எழுந்தருளிய அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு,பால்குடம்,தீச்சட்டி எடுத்து கிடாய் வெட்டி நேற்றிக்கடன் செலுத்தினர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை நடைபெற்ற பூசாரிகள் அழைப்பைத் தொடர்ந்து ஏராளமானோர் பாரம்பரிய வேடணிந்து கையில் கம்புடன் மாடுகளுடன் வந்து பாரம்பரிய மாடு விரட்டும் சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது,

இதனையடுத்து உறுமி மேளம் முழங்க தேவராட்டம் ஆடியவாறு அம்மன் ஊர்வலம் நடைபெற்றது, இதில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஆதாளியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்,
இந்த விழாவில் நிலக்கோட்டை, வத்தக்லகுண்டு,கொடைரோடு, திண்டுக்கல்,மதுரை,தேனி, சென்னை,பெங்களூரு,நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர், விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.



