வெம்பக்கோட்டை ஒன்றியம் ராமு தேவன்பட்டி, எட்டக்காபட்டி , எதிர் கோட்டை, மடத்துப்பட்டி, பாறைப்பட்டி, பூசாரி நாயக்கன்பட்டி, கோதை நாச்சியார்புரம்,சங்கரபாண்டியபுரம் வெற்றிலை யூரணி, சுற்றுவட்டார பகுதியில் ஆப்பிள் வகை தக்காளி அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

வெளியூர், வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக ஏற்ற வகையில் ஆப்பிள் தக்காளி இப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தக்காளிக்கு தினசரி தேவை இருப்பதால் தொடர்ந்து பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வரை ஆப்பிள் வகை தக்காளிகள் கிலோ 25 வரை விற்பனையானது. விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைத்து இந்த நிலையில் தக்காளி விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது ஆப்பிள் வகை தக்காளி கிலோ 8 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சங்கரபாண்டியாபுரம் விவசாயி தர்மராஜ் கூறியது
தக்காளி விலையில் ஏற்றம் இறக்கம் இருக்கும் என்று தெரிந்தாலும் அவ்வப்போது லாபம் கிடைப்பதால் தொடர்ந்து ஆப்பிள் வகை தக்காளிகள் சாகுபடி செய்து வருகிறோம். பயிரிடப்பட்டு 60 நாட்களில் பழங்கள் பறிக்க முடியும் .தொடர்ந்து ஐந்து முறை பலன் தருகிறது. குலதெய்வ வழிபாடு நடைபெற்ற சமயத்தில் தக்காளி தேவை அதிகமாக இருந்தது. விலையும் கிலோ இருபத்தி ஐந்து ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது விலை மிகவும் குறைவாக இருக்கும் போது அதிகளவு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆகையால் விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.






