புதுக்கோட்டை மாவட்டம் மாங்கோட்டை கிராமத்தில் வடமாடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் 13 காளைகள் களம் இறங்கின.

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் அவிழ்த்து விடப்படும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட மாட்டாது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் அவிழ்த்து விடப்படும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது வடமாடு நிகழ்ச்சியாகும். குறிப்பிட்ட ஒரு இடத்தில் மையப்புள்ளியில் காளையை கட்டிவிட்டு நீளமான ஒரு கயிறை மாட்டின் கழுத்தில் இணைத்து விடுவார்கள். மாடு அதைச் சுற்றி குறிப்பிட்ட தூரத்திற்கு வட்டமும் வரைந்து விடுவார்கள். மாடு அதுவரை தான் செல்லும் அளவிற்கு கயிறு கட்டி இருப்பார்கள். இந்த மாட்டை பிடிப்பதற்கு பத்து பேர் கொண்ட குழுவினர் இறங்குவார்கள். ஒரு மாட்டை அடக்குவதற்கு 15 முதல் 20 நிமிடம் வரை நேரம் அந்த வீரர்களுக்கு நிர்ணயிக்கப்படும்.

மாடு வெற்றி பெற்றாலும் மாட்டை அடக்கிய வீரர்கள் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான காளைகள் என்றால் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ஆயிரம் காளைகள் கூட அவிழ்த்து விடப்படும். ஆனால் வடமாடு மஞ்சு நிகழ்ச்சியில் 10 முதல் 15 காளைகளுக்குள் தான் களத்தில் நிமிடம் ஒதுக்கி விட முடியும்.
அந்த வகையில் மாங்கோட்டை ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் ஏழாம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு இந்த வடமாடு நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. கிராம மக்கள் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியின் பிரமுகர்களும் கலந்து கொண்டு காளைகளுக்கும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகளை வழங்கினர்.

முதல் மாட்டுக்கு கறம்பக்குடி தாசில்தார் ஜமுனா மாலை அணிவித்து மாட்டின் கொம்பில் துண்டு சுற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சி நடந்த இடத்திலேயே மருத்துவக் குழுவினரும் இருந்ததால் இந்த நிகழ்வில் காயம் பட்ட ஆறு பேருக்கு உடனடியாக மருத்துவமும் செய்யப்பட்டது. இந்நிகழ்விற்காக தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு துறையினரும் பாதுகாப்புக்காக வந்திருந்தனர்.






