தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் அரசு மது விற்பனை நடத்தி வருகிறது. இதுபோல, ‘ஆந்திரப் பிரதேஷ் ஸ்டேட் பிவரேஜஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஏபிஎஸ்பிசிஎல்)’ நிறுவனம் மூலம் ஆந்திர மாநில அரசு மது விற்பனையை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஆந்திராவில் மதுபான வகைகளின் விலை 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இது, மதுபிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், ஆந்திரா – தமிழக எல்லைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆந்திர மதுபிரியர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
அத்துடன், தமிழகத்தில் வாங்கும் மது பாட்டில்களை சட்டவிரோதமாக ஆந்திராவுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்யப்பட்டது. இது, ஆந்திர அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. எனவே, தமிழகம் சென்று மது வாங்கும் போக்கை தடுக்கும் நடவடிக்கைகளை ஆந்திர மாநில அரசு மேற்கொண்டது.இந்நிலையில், மது வகைகள் விற்பனை விலையில் அதாவது, எம்ஆர்பி-யில் இருந்து 20 சதவீதத்தை அதிரடியாக ஆந்திர மாநில அரசு குறைத்துள்ளது. இதனால், ஆந்திராவில் இனி மது விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரா மாநில அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையால், சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யும் போக்கு குறையும் என்று அம்மாநில அரசு எதிர்பார்க்கிறது.