• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மின் வாரிய அலுவலகத்தில் திமுக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி..,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த 4-வது வார்டு தி.மு.க. கிளைச் செயலாளர் சபரி ராஜன். இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ்பகுதியில் இவரும், மேல் பகுதியில் இவரது மகளும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இருவருக்கும் தனித்தனி மின் இணைப்பு இருந்த நிலையில் அதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரே மின் இணைப்பாக மின்வாரிய அதிகாரிகள் மாற்றி உள்ளனர். 

இதனால் வழக்கமாக செலுத்தும் கட்டணத்தைவிட அதிகமாக வந்து உள்ளது. இதனை மாற்ற வலியுறுத்தி சபரி ராஜன் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்துள்ளார். அதிகாரிகளும் ஆய்வு செய்து சென்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த மாதம் வீட்டுக்கு ரூ.8 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளது. வழக்கமாக ரூ.1000 முதல் 1,500 வரை மின் கட்டணம் செலுத்திய நிலையில் தற்போது ரூ.8 ஆயிரம் வந்து இருப்பது சபரிராஜனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனது மகள் வெளியூர் சென்றுள்ளதால், மின்சாரம் பயன்படுத்தாத நிலையிலும் மின் கட்டணம் அதிகரித்து உள்ளதாகவும், வழக்கம்போல இரு மின் இணைப்பு வழங்க ஆன்லைன் மூலமாக தேவையான ஆவணங்கள் அளித்திருப்பதாகவும், அதன் மீது எதுவும் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக சபரிராஜன் புகார் கூறினார்.

மேலும், டீக்கடை நடத்தி வரும் தன்னால் ரூ.8 ஆயிரம் மின்கட்டணம் செலுத்த முடியாத நிலை இருப்பதாக கூறி சபரிராஜன் இன்று காலை தனது மனைவியுடன் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தின் வளாகத்தில் போராட்டத்தில்
ஈடுபட்டார். அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் மின் கட்டணம் கண்டிப்பாக கட்டித்தான் ஆக வேண்டும். எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறினர்.

இதைக்கேட்ட சபரி ராஜன் ஆவேசமடைந்து தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து சபரி ராஜனிடம் இருந்து மண்ணெண்ணை கேனை பறித்ததோடு, அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.”