பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (06.10.2025) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 137 கோடியே 31 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 20 சமூகநீதி விடுதிக் கட்டடங்கள், 39 கோடியே 29 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் 39 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கான வகுப்பறை கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.
இதில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட நத்தக்காடு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.72கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஒரு அறிவியல் ஆய்வகக்கட்டடம், பொம்மனப்பாடி அரசு அதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் ரூ.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வக கட்டடங்களை திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, நத்தக்காடு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தில் குத்துவிக்கேற்றி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் அட்மா தலைவர் ஜெகதிசன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் வாசுதேவன், பள்ளி தலைமையாசிரியர் ஷீலா, தாட்கோ தொழில்நுட்ப உதவியாளர் அருண் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.








