அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையை தாயுள்ளத்தோடு கேட்டு அதனை டாக்டர் கலைஞர் வழியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் என சிறுபான்மைத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் புகழ்ந்து பேசியுள்ளார்.
மதுரையில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் சிட்கோ தொழிற்பேட்டை தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் 5 லட்ச ரூபாய் மதிப்பில் 100 பேருக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்வையும் மற்றும் தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முகாமையும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கி வைத்து பேசினார்.
மேலும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் சிறு தொழில் செய்வதற்காக சிட்கோ நிலங்கள் விலையை தமிழக அரசு குறைத்துள்ளது. அதன்மூலம் தொழில் செய்ய முனைவோர்கள் அதிகரித்து வருகின்றனர். அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையை தாயுள்ளத்தோடு ஏற்று அதனை டாக்டர் கலைஞர் வழியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் முத்துராமன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதன், மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரி ராஜசேகர், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் மைதீன் பிச்சை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.