• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பிரமுகர் வெங்கடேஷ் உட்பட 8 பேர் கைது..,

ByAnandakumar

Jul 14, 2025

கரூர் மாவட்டம், வாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மணிவாசகம் (வயது 45). இவர் வாங்கல் காவிரி ஆற்றுப்படுகையில் ராணி என்பவருடைய அனுபவ பாத்தியத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலத்திற்கு அருகில் வெங்கடேஷ் என்பவரது நிலம் இருந்துள்ளது. நேற்று இரவு மணிவாசகத்துக்கு சொந்தமான இடத்தை ஒட்டிய பகுதியில் வெங்கடேஷ் மணல் அள்ள முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த ராணி குடும்பத்தினர் மணிவாசகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மணிவாசகம் தனது தம்பி குட்டி என்கின்ற யூகேஸ்வரன், உறவினர் ஆனந்த் என்பவருடன் சென்று வெங்கடேஷிடம் இட எல்லை தொடர்பாக கேள்வி எழுப்பிய போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், நாளை காலை அளந்து கொள்ளலாம் என பேசிக் கொண்டிருந்த போது வாக்குவாதம் முற்றி அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வெங்கடேஷ் தரப்பினர் அரிவாளால் வெட்டியதில் மணிவாசகம், யூகேஸ்வரன், ஆனந்த் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், இதனை தடுக்க வந்த ராணி மற்றும் அவரது அம்மா ராசம்மாளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அதனை தொடர்ந்து வெங்கடேஷ் தரப்பினர் தப்பியோடிய நிலையில், அரிவாள் வெட்டு விழுந்தவர்களை தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாங்கல் காவல் நிலைய போலீசார் 5 பேரையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் மணிவாசகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குட்டி என்ற யூகேஸ்வரன், ஆனந்த் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், ராணி மற்றும் அவரது தாய் ராசம்மாள் ஆகியோர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள வாங்கல் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த வெங்கடேஷ் உடலை பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பெற்றுச் சென்றனர்.

இந்த நிலையில் இச்சம்பவத்தில் திமுக பிரமுகர் வெங்கடேஷ் உட்பட கவியரசன், விவேக் ,மணிகண்டன், சந்திர பிரகாஷ், கிருஷ்ணன், நிஜாமுதீன், செந்தமிழன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் 6 பேர் வாங்கல் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இரண்டு பேர் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.