• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

பராமரிப்பின்றி அழிந்து வரும் மருந்துகோட்டை..,

குமரி மாவட்டத்தில் வேணாட்டு அரசர்கள், மார்த்தாண்டவர்மா, ராணி மங்கம்மாள், குறுநிலமன்னர்கள், பாண்டியர்கள், விக்ரமாதித்யா வரகுணன் உள்ளிட்ட பல்வேறு மன்னர்கள் கால வரலாற்று பொக்கிஷங்கள் கேட்பாரற்ற நிலையில் கிடக்கிறது. பாதுகாக்கப் படவேண்டிய சரித்திர கோட்டைகள் சிதைந்து அழிந்து வருகிறது. இதற்கு அத்தாட்சியாக உள்ளது தக்கலை அருகே உள்ள மருந்து கோட்டை.

17ம் நூற்றாண்டில் வேணாட்டு அரசர் மார்த்தாண்ட வர்மா தலைமையிலான படையினருக்கும், டச்சுப் படையினருக்கும் குளச்சலில் போர் நடைபெற்றபோது மார்த்தாண்டவர்மா ஐக்வெற்றி பெற்றார். அப்போது 24 டச்சுப் படை வீரர்களை பிணைக்கைதிகளாக இருந்ததாகவும் அவர்களுள் டிலனாய் என்பவர் அரசரின் கவனத்தை ஈர்த்தார் எனவும் கூறப்படுகிறது. இதனால் அவரை திருவிதாங்கூர் படைப்பிரிவில் இணைத்த மன்னர் அவரது மேற்பார்வையில் போர் பயிற்சி வழங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது வெடிமருந்து தயாரிக்கவும், போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் கட்டப்பட்டதே மருந்து கோட்டை. திருவிதாங்கூர் அரசை நிறுவுவதற்கும், பல்வேறு வெற்றிகளை பெறுவதற்கும் இக்கோட்டை பயன்பட்டு உள்ளது. ஆனால் இன்றோ பராமரிப்பின்றி பயன்பாடற்று, பாழடைந்த நிலையில் உள்ளது.3 ஏக்கர் பரப்பை கொண்ட இக்கோட்டையின் உள்பகுதியில் பெரிய கல் மண்டபம் உள்ளது. எதிரிகளை கண்காணிப்பதற்கு என்று பத்மனாபபுரம் கோட்டையில் உள்ளது போல் பிள்ளை கோட்டையும் அமைக்கப்பட்டு உள்ளது. இவையாவும் கண்டுகொள்ளப்படாமல் அழிந்துவருகின்றன.

வரலாற்று சிறப்புமிக்க இக்கோட்டையில் இருந்து பார்த்தால் மாம்பழத்துறையாறு அணை, மையக்கோட்டை மற்றும் இயற்கை எழில்சூழ்ந்த பகுதிகள் கண்ணுக்கு விருந்தாகும். பலரின் காயத்திற்கு மருந்தளித்த இடம் இன்று படுகாயம் அடைந்த வீரனைப்போல் அந்திம காலத்தை சந்திக்கும் நிலையில் உள்ளது. மூலிகைகள் சூழ்ந்த இக்கோட்டை புதர்செடிகளுக்குள் புதைந்து வருகிறது. எனவே வரலாற்று கருவூலமான இக்கோட்டையினை பாதுகாக்கவும், சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்ல உரிய அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திடும்படி சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொதுசெயலாளர் சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரிகோட்ட செயலாளர் அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் குழந்தைசாமி, செயலாளர் சந்திரா, துணை தலைவர் ஜேசுராஜ்,வரலாற்று ஆய்வு பிரிவு மாவட்ட செயலாளர் காப்பித்துரை மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.