மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்த சைவ ஆதீன மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் ஆதீன குரு முதல்வர் குருபூஜை விழா மற்றும் ஞானபுரீஸ்வரர் ஆலய வைகாசி பெருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

பத்து நாட்கள் ஆலயம் மற்றும் குருபூஜை விழாவும், நிறைவாக பதினோராம் நாளான இன்று ஆதீன மடாதிபதியின் பட்டிணப்பிரவேசம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன் முக்கிய நிகழ்ச்சியான சிவிகை பல்லக்கில் ஆதீன கர்த்தரை சுமக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு தங்கப்பாத குறடு தாங்கிய ஆதீன 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை கட்டளை தம்புரான் சுவாமிகள் சிவிகை பல்லக்கிற்கு அழைத்து வந்தனர்.
தொடர்ந்து பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி துவங்கியது.யானைகள் ஒட்டகங்கள் குதிரைகள் முன்னே செல்ல மல்லாரி இசை நிகழ்ச்சியுடன் தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி சிபிகை பல்லக்கில் நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்தார். பக்தர்கள் மற்றும் பாதம் தாங்கிகள் வெள்ளிப் பல்லக்கில் அவரை அமர்த்தி பல்லக்கை சுமந்து வந்தனர். நாடு முழுவதும் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதை முன்னிட்டு பரதநாட்டியம் மல்லாரி இசை கச்சேரி நாட்டுப்புற இன்னிசை கச்சேரி ஆகியவை நடைபெற்றது.
ஒயிலாட்டம் மயிலாட்டம் பொய்க்கால் குதிரை கரகாட்டம், காளையாட்டம் உள்ளிட்ட கண் கவர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து நான்கு மாட வீதிகளில் வழியே பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. வீடுகள் தோறும் விளக்கேற்றி வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர் நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் மடாதிபதி சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட மடங்களின் ஆதீன கர்த்தர்கள் கட்டளைத் தம்பிரான் சுவாமிகள், உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை தொடர்ந்து ஆதீனத்திற்கு மீண்டும் எழுந்தருளிய மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கெரலுக்காட்சி நடைபெற்றது. நாடுமுழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் மதுரை ஆதீன மடாதிபதி, செங்கோல் ஆதீன மடாதிபதி, திண்டுக்கல் ஆதீன மடாதிபதி, தொண்டை மண்டல ஆதீன மடாதிபதி மற்றும் பல்வேறு மடங்களைச் சார்ந்த 50க்கும் மேற்பட்ட கட்டளை தம்பிரான் சுவாமிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் பங்கேற்று இசைக்கச்சேரி நடத்தினார்.