கோடை விடுமுறை துவங்கியுள்ளதால் சுற்றுலா தலங்களில் அதிகளவில் பொதுமக்கள் குவிந்து வரும் நிலையில் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து நீர்வரத்து இருக்கும்.
கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவியின் பாதுகாப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி, நேற்று சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததை அடுத்து இன்று கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
