• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மின்வாரியத்துக்கு 3 புதிய இணையதள சேவைகள் தொடக்கம்

Byவிஷா

May 6, 2025

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 3 புதிய இணையதள சேவைகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
தமிழக மின்வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்படாத வகையில், ஏராளமான டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தனியார்களிடம் இருந்து மின் சேவை பெறப்பட்டு, மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்சார விநியோகம் செய்வதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணாசாலையிலுள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் புதிய மின்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில், இதில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டு, மின்வாரியத்தின் வளர்ச்சிப் பணிகள், இலக்குகள், புதிய மற்றும் சிறப்புத் திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, தமிழகத்திலுள்ள அனைத்து அனல் மற்றும் புனல் மின்னுற்பத்தி நிலையங்கள் முழு திறனில் இயங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், தமிழகத்தின் மின்தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோடைவெயில் மற்றும் மழை காரணமாக மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரிசெய்து தடையில்லா மின்சாரம் வழங்குவதுடன், அடிக்கடி மின் தடை ஏற்படும் பகுதிகளை சம்பந்தப்பட்டபொறியாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சரிசெய்ய உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மின்வாரியத்தின் 3 புதிய இணையதள சேவைகள் தொடங்கி வைத்தார். மின்துறையை நவீன மயமாக்குவதற்காக தொடங்கப்பட்டுள்ள பசுமை எரிசக்தி ஆதாரங்கள் குறித்த தகவல்களை வழங்கும் வகையிலான தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் (டிஎன்ஜிஇசிஎல்) இணையதளம், வாரியத்துக்கும் வழங்குநர்களுக்கும் இடையிலான தொடர்புகளை சீரமைக்கும் வகையிலான வழங்குநர் இணையதளம், பணியாளர்களின் மனிதவள தேவைகளை நிர்வகிப்பதற்கான இணையதளம் என்ற மூன்று புதிய இணையதள சேவைகளையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.