• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஏழை தடகள மாணவிக்கு காலத்தே செய்த உதவி..,

கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த ஏழை தடகள மாணவிக்கு கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி.செல்வகுமார் நிதியுதவி வழங்கினார்.

கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருபவர் ரிந்தியா. கன்னியாகுமரியை அடுத்த சுவாமிநாதபுரத்தைச் சேர்ந்தவரான இவரது விடா முயற்சியாலும், உடற்பயிற்சி ஆசிரியர் ராஜ்குமாரின் ஒத்துழைப்பாலும், தேசிய, மாநில, மாவட்ட அளவில் நடைபெற்று வரும் தடகளப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகிறார்.

இந்நிலையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான பள்ளிகளுக்கிடையே ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும், 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார்.
இதனிடையே வரும் 11.05.2025 அன்று பாட்னாவில் தேசிய அளவில் நடைபெற உள்ள கேலோ இந்தியா தடகளப் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்க உள்ளார்.

இவருக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவனரும், தென்குமரி கல்விக்கழக செயலாளருமான பி.டி, செல்வகுமார் திங்கள்கிழமை நிதியுதவி வழங்கி பேசியதாவது: கிராமப்புறங்களில் பல ஏழை பெண்கள் திறமைகளை சுமந்து கொண்டு, எதிர்கால கனவுகளோடு அடுத்த கட்டத்துக்காக ஏங்கி தவிக்கின்றனர்.

அப்படிப்பட்ட ஏழை பெண்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் உதவிக்கரம் நீட்ட தயாராக உள்ளது. மேலும், ரிந்தியா போன்ற வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் போதிய உதவிகளை செய்ய வேண்டும். இவ்வாறு உதவிகள் செய்யும் பட்சத்தில் ஒலிம்பிக் அளவுக்கு இம்மாணவிகள் முன்னேற வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியில் ரிந்தியாவின் தந்தை ஐயப்பன், தாயார் செண்பகவல்லி, பயிற்சியாளர்கள் ராஜகுமார், விஷ்வா, கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வழக்குரைஞர் டி.பாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சிவராஜன், ஆசிரியர் முத்துசாமி, கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் ரகுபதி, கணேசன், சுபாஷ், செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எதிர் பார்க்காத நிலையில் கிடைத்தப் பொருளாதார உதவி குறித்து எனக்கு நன்றி என்ற சொல்லைக் கூட உச்சரிக்க நாவில் வார்த்தைகள் வர மறுக்கிறது. இதயத்து ஓசை அதிகமாய் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என மாணவி “ரித்தியா” சைகை மொழியில் வெளிப்படுத்திய உணர்கள் நிறைந்த நிலையை அங்கே கூடி இருந்தவர்களும் மானசீகமாக உணர்ந்தார்கள்.