மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக உலகின் பரபரப்பான விமான நிலையமான லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
உலகில் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் முக்கியமானதாக கருதப்படுவது லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம். இங்கிருந்து தினம்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்கள் உலகின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விமான நிலையத்துக்கு மின்சாரம் வழங்கக்கூடிய துணை மின் நிலையத்தில் இந்திய நேரப்படி இன்று (மார்ச் 21) காலை 5 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் விமான நிலையத்தில் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டது. இதுகுறித்துதகவல் அறிந்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
தீ விபத்து ஏற்பட்ட தகவல். கிடைத்த அடுத்து சில மணி நேரங்களில் விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பணியாற்றும் விமான நிலைய ஊழியர்களின் பாதுகாப்பை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஹீத்ரோ விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்து காரணமாக விமான நிலையத்துக்கும், சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 16 ஆயிரம் வீடுகளுக்கும் மின்விநியோகம் செய்வது முற்றிலும் தடைப்பட்டது.
மேலும் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு வந்த விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. தீ விபத்தைத் தொடர்ந்து பயணிகள் யாரும் வரவேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு விமானம் புறப்படும் நேரத்தை உறுதி செய்து கொள்ளுமாறும் பயணிகளுக்கு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.